வாரிசுகளுக்கு ஒரு கடிதம்
Sunday, May 9th, 2010நான் கிழக்கு என்றால்
நீ மேற்கில் இருக்கிறாய்
நான் ஆம் என்றால்
நீ இல்லை என்கிறாய்
நான் மேலே என்றால்
நீ கீழே நகர்கிறாய்
நான் உண்மை விரும்பினால்
நீ எதிர்மறையாகிறாய்
நீ என்னுள் ஒரு புள்ளியில் தொடங்கினாய்
எந்த புள்ளியில் நம் சிந்தை இணையும்?
நீ செல்லும் பாதையில் எதிரே மட்டும் பார்க்கிறாய்…..
நான் உன் பாதையின் இடர்களில் கவனம் வைக்கிறேன்…..
உனக்குப் பிடித்தவற்றை கனவிலும் செய்யத் துடிக்கிறேன் ….. நான்
எனக்குப் பிடித்தவற்றை மறந்தும் கூட செய்ய மறுக்கிறாய்….நீ
பத்து திங்கள் காத்திருந்தேன்
உன் பிஞ்சு முகம் பார்ப்பதற்கு
பகல் இரவாய் விழித்திருந்தேன்
படித்து நீ எழுவதற்கு…
இன்னும் பொறுத்திருப்பேன்….
என்னை நீ உணர்வதற்கு…..
நாளை நீ தரும் பல்லக்கு வேண்டாம்
இன்று உன் நம்பிக்கை போதும்
கண்ணயரும்போதும்
உன் நன்மைதான் கருத்தில் கொள்வோம் என்று.
கண்ணே ……
நீ……
எங்கள் உயிரில் விளைந்த பயிர்
அக்கறையில் தரும் அறிவுரையை
அதிகாரமாய் நினையாதே …..
எண்ணத்தால் விலகாதே….
நீயும் நாளைய பெற்றோர் என்பதை மறந்து விடாதே…
எங்கள் செல்வமே !
