கடவுளிடம் ஒரு கேள்வி
Friday, May 21st, 2010
உன்னை நான் சந்தித்தேன், நீ ஆகாயத்தில் ஒருவன்!
நீல வானம் வெண்ணிற மேகங்கள்
நெடுந்தூரப் பயணம்
நிலவைக் கடந்து மேலும் உயரே
நட்சத்திரங்களுக்கு நடுவே
செல்வது நானா? எப்படி?
எங்கே இவ்வளவு வேகமாய்?
கணங்கள் யுகங்களாக
கால்கள் தன்னிச்சையாய் பயணித்தன
புரியாத திசையில் தெரியாத வழியில்
பூமிக்கு திரும்பும் பாதை எங்கே ?
திக்குத் தெரியாமல் திணறி நிற்கையில்
திடீரென
சந்தனமும் பூக்களும் கலந்த
தெய்வீக மணம் நாசியில்
பாதங்கள் நின்றன
காண்பது நினைவா? கற்பனையா?
கடவுளா? இது நிஜமா?
மனப்பிரமையா?
சுவாசிக்க மறந்து பின் சுதாரித்து
வணங்கி பின் தயக்கமாய்
ஒரு கேள்வி என்றேன்
பொன்னகையாய் சிரித்து
ஏழு லோகம்
அதிராமல்
எதிரொலிக்க
”சொல்” என்றார்
இத்தனை நாட்களாய் எங்கிருந்தீர்கள் ?
கடவுள் இல்லை என்பவர்களுக்கு
நிரூபிக்கமுடியாமல் தவித்தோம் என்றேன்!
”உலகில் வாழும் நல்ல மனிதர்களின்
ஆன்மாதான் என் விலாசம்
உன்னுள்ளும் முகவரி ஆவேன்
உன் எண்ணங்கள் உயர்வாகும்போது”
புன்னகைத்து மறைந்தார்….
கடவுளைக் கண்ட
பரவச திடுக்கிடலுடன்
ஆகாயத்திலிருந்து படுக்கையில்
விழுந்தெழுந்தேன்
எதிர் சுவற்றில்
ஆண்டவன் சிரித்தார்!
*******
கவிதை பிடித்திருந்தால் ஊக்கம் தர இங்கே செல்லுங்கள்